பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்காக, போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா கட்டப்பட்டு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்து, விரைவில் வெளிவர இருக்கும் அவர் இந்தப் புதிய வீட்டில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்துள்ளது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவும் அவரது சகோதரரும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா, வேதா இல்லத்தில் குடியேற முடியாது.
இதனால், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரிலேயே சசிகலாவுக்காக பல கோடி ரூபாய் செலவில், சொகுசு பங்களா கட்டப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
‘ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ்’ என்ற, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில், கடந்த ஆண்டு நவம்பரில் இந்தக் கட்டடத்துக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
வேதா இல்லத்தைப் போலவே இந்தக் கட்டடத்திலும் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் உடையதாக, இரண்டு பிரிவுகளாக, இந்த பங்களா கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் தான் இந்தப் பணிகளை கவனித்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சசிகலா, இளவரசி ஆகியோர் அந்த வீட்டில் குடியேறுவார்கள் எனக் கூறப்படுகிறது.