சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 208,784 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அன்றாடம் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது சென்னைவாசிகளுக்கு நிம்மதி தரும் தகவலாக அமைந்துள்ளது.
குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கிருமித்தொற்று குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சுகாதார நிறுவனம் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளபடி நிலையான மருந்து மற்றும் தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் என்றார்.
தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்புள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 265,285 அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 55 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 5,063 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 6,500 பேர் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாக விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிருமி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்தன.
இந்நிலையில் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக தொடர்ந்து 32 நாட்களாக அன்றாடம் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது சுமார் 55 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.