சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கு விபத்தை அடுத்து, பாமக தலைவர் ராமதாஸ் அவசர எச்சரிக்கையுடன் கூடிய கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஐந்து ஆண்டுகளாக 740 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கும் ராமதாஸ், அவற்றை உடனடியாக அகற்றும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் வைக்கப்பட்டு உள்ள அமோனியம் நைட்ரேட், 2015ல் சென்னை துறைமுகம் வழியாக அந்தப் பொருள் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டது என்பதையும் அவர் டுவிட்டர் செய்தியில் சுட்டி இருக்கிறார்.
இவ்வேளையில், சென்னை துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதால் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.