ஈரோடு: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அபெக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழகம் முழுவதும் ரூ. 100 கோடி மோசடி நடந்து இருப்பதாகவும் அது பற்றி தீவிர விசாரணை தொடங்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரேஷ், சாய்ராம் என்ற இரண்டு பேரைப் பங்குதாரர்களாகக் கொண்ட அபெக்ஸ் நிறுவனம், 85 நாடுகளில் இருந்து 19 மொழிகளில் வெளியாகும் உலகச் செய்திகளை செயலி மூலம் பார்த்தால் 300% வரை லாபம் கிடைக்கும் என விளம்பரம் செய்தது.
இதற்காக ரூ. 1,440 முதல் ரூ. 48,000 வரை வைப்புத் தொகை செலுத்தினால், 20 மாதங்களில் 4 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு வகையான திட்டங் களை அறிவித்த அந்த விளம்பரம், புதியவர்களைச் சேர்த்துவிட்டால் 20% தொகை கிடைக்கும் என்றும் உறுதி அளித்தது. இந்தக் கவர்ச்சிகளை நம்பி தமிழகம் முழுவதும் மொத்தம் 100,050 பேர் அதில் உறுப்பினராகச் சேர்ந்தனர்.
அவர்கள் ரூ. 100 கோடிக்கும் மேலாக முதலீடு செய்து இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் திடீரென அபெக்ஸ் நிறுவனம் காணாமல் போய்விட்டது. அதன் செயலி முடங்கியது.
இதனையடுத்து ஈரோட்டில் சிலர் போலிசிடம் புகார் தெரிவித்தனர். போலிசார் வழக்குப் பதிந்து விசாரணயை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.

