தமிழகத்திலும் அமோனியம் நைட்ரேட்: ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கு விபத்தை அடுத்து, பாமக தலைவர் ராமதாஸ் அவசர எச்சரிக்கையுடன் கூடிய கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஐந்து ஆண்டுகளாக 740 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கும் ராமதாஸ், அவற்றை உடனடியாக அகற்றும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் வைக்கப்பட்டு உள்ள அமோனியம் நைட்ரேட், 2015ல் சென்னை துறைமுகம் வழியாக அந்தப் பொருள் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டது என்பதையும் அவர் டுவிட்டர் செய்தியில் சுட்டி இருக்கிறார்.
இவ்வேளையில், சென்னை துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதால் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்க நடவடிக்கை
சென்னை: சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடலில் மீன் வளத்தை அதிகப்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் 30 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் படகில் சென்று செயற்கை பவளப்பாறை அமைக்கும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ரூ.2 கோடி பட்டுச்சேலைகள் தேக்கம்
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் ஆகியவை பட்டுச் சேலை நெசவில் பெயர் பெற்றவை. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்தியூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுச் சேலைகள் தேக்கமடைந்து உள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: கடும் மழை, சேதம்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை தொடர்கிறது. பல அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் மழை நீர் புகுந்து இருப்பதாகவும் மீட்புப் பணி நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அவலாஞ்சியில் 58 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.
சூறாவளியும் சேர்ந்துகொண்டதால் 200 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இருவர் பலியாகிவிட்டனர். ஊட்டியிலும் கடும் மழை தொடர்கிறது.
இ-பாஸ் விற்பனை: 2 பேர் கைது
திருச்சி: தமிழக அரசின் கட்டணம் இல்லாத இ-பாஸ்களை விற்ற புகாரின்பேரில் திருச்சியைச் சேர்ந்த பயண நிறுவன உரிமையாளர் உட்பட மூவரை வேலூர் போலிஸ் கைது செய்தது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக தகவல் பரப்பி ரூ.2,000 வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் இ-பாஸ் பெற்று அவற்றை சுமார் 100 பேருக்கு விற்று இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்பருக்குச் சிலை கோரிக்கை
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், அயோத்தியில் மகாகவி கம்பருக்கு முழு உருவச் சிலை அமைப்பதே ராமருக்குச் செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும் என்று தெரிவித்து பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார், “வால்மீகி முனிவர், தனது ராமாயணத்தில் மிகச் சிறந்த மன்னர் என்ற அளவில் ராமரைப் பாராட்டி இருக்கிறார். ஆனால் மகாகவி கம்பர், தான் இயற்றிய ராமாயணத்தில் ராமரை மிகச் சிறந்த லட்சிய மனிதராகப் போற்றி இருக்கிறார்.
“எனவே, அயோத்தியில் மகாகவி கம்பருக்கு முழு உருவச் சிலை அமைப்பதே ராமருக்குச் செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.