சென்னை: சென்னையில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் சென்னை மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமையன்று சுமார் 65 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,445 ஆண்கள், 2,435 பெண்கள் என மொத்தம் 5,880 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக வெளியான தகவல் ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னையில் அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதன்முறையாக வெள்ளிக்கிழமையன்று ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவானது. வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும் திருவள்ளூரில் 388 பேரும் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானது உறுதியாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் மூன்று மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2,85,024 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. இதுவரையில் தமிழகத்தில் 4,690 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 2,27,575 பேர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். சுமார் 52 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கம் முதலே கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை மாவட்டம்தான். சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,100 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்தன. இந்நிலையில் 51 நாட்களுக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் மூன்று இலக்கங்களாக குறைந்துள்ளது.
51 நாட்களுக்குப் பிறகு புதிய தொற்றுச் சம்பவங்கள் ஆயிரத்துக்கும் கீழ் பதிவாயின

