சென்னை: அனைவரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை உறுதிப்படுத்த திமுக எப்போதும் உழைத்து வருகிறது என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் மறைப்பதன் மூலம் இந்த வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அச்சுறுத்தலை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தக் கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான ஓர் ஆலோசனைச் செயல் முறையை மீண்டும் நிறுவ வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வின் மூலம், நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி முறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடைமுறையை உத்தரவாதப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசின் தன்னிச்சையான முடிவை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன்," என மு.க.ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமது இந்தப் பதிவில் உள்ள அனைத்து விவரங்களையும் பிரதமர் மோடிக்கு கடிதம் வழி தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
அதில் மேலும் பல முக்கிய தகவல்களை அவர் குறிப்பிட்டிருப்பதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

