சேலம்: கொரோனா கிருமித் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் இப்பரவல் இன்னும் அதிக அளவில் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் கொரோனா முறியடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் தங்களின் உயிரை இழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
"கொரோனா சூழலிலும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
"இருப்பினும், இந்த கொரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும். அப்போதுதான் பிள்ளைகளை பெற்றோர்கள் நிம்மதியாக பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியும்.
"மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
"கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே மருந்து சுய தனிமைதான். மத்திய சுகாதாரத் துறையின் கருத்தைத்தான் தமிழக அரசும் வலியுறுத்தி வருகிறது.
அத்துடன், இத்தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கும் முன்வர வேண்டும். மாநில அரசின் நிலைப்பாடு ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழி கொள்கைதான்," என்று முதல்வர் தெரிவித்தார்.

