சென்னை: சென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் முழுவதும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் சேகரிக்கப்பட்ட கிடங்கு வெடித்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்ததையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பாதுகாப்பை ஆய்வு செய்த நிலையில் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. மொத்தமுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டில் 697 டன் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. எஞ்சிய 43 டன் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் மொத்தமுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டில் 43 டன் அளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் கரைந்ததாகவும் மீதமுள்ள 697 டன் அமோனியம் நைட்ரேட் மட்டும் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதன் மூலம் முழுவதுமாக அமோனியம் நைட்ரேட் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக சுங்கத் துறை கூறியது.
ஹைதராபாத் நிறுவனம் ஒன்று இதனை ஏலத்தில் எடுத்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக 200 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.