மூணாறு: கேரள மாநிலம், மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல் கள் நேற்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு பகுதியில் உள்ள பெட்டிமடி என்ற இடத்தில் கடந்த 7ஆம்தேதி அதிகாலையில் கன மழை காரணமாக திடீரென ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் 25 வீடுகள் மண்ணில் புதைந்தன.
வீட்டில் இருந்த 80க்கும் மேலான தொழிலாளர்களும் குடும்ப உறுப் பினர்களும் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த 80 பேருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் இவர்களை மீட்கும் பணிகளில் கேரள அரசு பாகுபாடு காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
மண்சரிவில் புதையுண்டு இறந்த 45 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் உடல் களைத் தேடும் பணியும் தொடர் வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 4வது நாளாக நேற்று திங்கட் கிழமை அன்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
ராட்சத பாறைகள் மண்ணுடன் கலந்து கிடப்பதால், உடல்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மூணாறு அருகே உள்ள ராஜ மலை, பெட்டிமுடி மலைக் கிரா மங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கயத்தாறு, சங்கரன் கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி, சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
நிலச்சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர்
பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பெட்டிமுடியைச் சேர்ந்த அனந்தசிவனும் அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அனந்தசிவன் (58), அவருடைய மனைவி வேலுத்தாய் (55), மகன் பாரதிராஜா (35), மருமகள் ரேகா (26) உள்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

