சென்னை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கின் தொடர்பில் கைதான துணை போலிஸ் அதிகாரி பால்துரை கொரோனா கிருமித் தாக்கத்தால் உயிரிழந்தார்.
சாத்தான்குளத்தில் வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்சும் போலிஸ் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, பல பக்கங்களில் இருந்தும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழி கண்டனக் குரல்கள் வெடித்தன. பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
இதனையடுத்து, இவ்வழக்கை முதலில் சிபிசிஐடி போலிசார் விசாரித்தனர். அதன்பின்னர் சிபிஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கு கைமாறியது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ள எட்டு சிபிஐ அதிகாரிகளில் ஆறு பேருக்கு கிருமி தொற்றியதால், அவர்கள் தற்போது மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பால்துரையுடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இவர்களைக் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கும் தொற்று பரவியதாகக் கூறப்பட்டது.
இவ்வழக்கின் தொடர்பில் துணை போலிஸ் அதிகாரி பால்துரை உள்ளிட்ட 10 போலிசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.