சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று இணை யத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து கிருமி பரவும் சூழ்நிலையில் அப்போதைய நேரத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.