சென்னை: இந்தியாவின் சுதந்திர தினம் வரும் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்படக்கூடும் என்று மத்திய வேவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறையின் அந்த எச்சரிக்கையை அடுத்து மாநிலம் முழுவதையும் பாதுகாப்புக் கேடயத்துக்குள் கொண்டுவர போலிசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
சுதந்திர தினத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. மாநிலத்தில் கொவிட்-19 காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கின்றன. மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமய பயங்கரவாதிகள், முக்கிய பிரமுகர்களையும் முக்கியமான இடங்களையும் பொது இடங்களிலும் தாக்குதல்களை நடத்த வாய்ப்பு இருப்பதாக வேவுத்துறை எச்சரித்துள்ளது.
‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பும் அல் காய்தா அமைப்பும் இணையம் வழி இளையர்களைக் கவர்ந்து பயங்கரதாக்குதல்களை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வேவு அமைப்புகள் தெரிவித்தன.
அந்தப் பயங்கரவாத அமைப்புகளும் இதர பயங்கரவாத அமைப்புகளும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்கள் சதித்திட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்க முயன்று வருகின்றன. லக்ஷார் அல் தொய்பா அமைப்பைச் சேர்ந்த சிலர் பெரும் புள்ளிகளுக்குக் குறிவைத்து வருவதாகவும் வேவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதனை அடுத்து தமிழக போலிசார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழகத்தின் பல இடங்களிலும் போலிசார் சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
முக்கியமான சாலைகளில், சந்தேகத்துக்கு இடமான இடங்களில் அவர்கள் சோதனைகளை முடுக்கி விட்டுள்ளனர்.