சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளி யிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப் பட்ட கு.க.செல்வம் திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்தார்.
“அத்துடன், அவரிடம் கேட்கப் பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்,” என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு நெருக்கமான இவர் திமுக மாவட்டச் செயலாள ராகப் பலமுறை முயன்றார். ஜெ. அன்பழகன் வலுவாக இருந்ததால் இவருக்கு வாய்ப்புத் தட்டிப்போனது.
இந்நிலையில் ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிற்றரசு நியமிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் முருகன் மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அண்மையில் டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
பாஜக தலைவரை சந்தித்ததும் உடனடியாக கட்சியில் இருந்து கு.க செல்வத்தை இடைநீக்கம் செய்த திமுக தலைமை, உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டது.
இதற்கு கு.க செல்வம் தரப்பில் விளக்கமும் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கு.க செல்வம் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனக் கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.