தூத்துக்குடி: வட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலிசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி உள்ளனர். பின்னர் அவர்களை மீட்டு சிப்காட் போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி, அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்தை கணேசன் செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகும் அவர்கள் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் வட்டி கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து கணேசன் ஏரல் போலிசில் பலமுறை புகார் அளித்தும் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த கணேசன், அவருடைய மனைவி வேளாங்கண்ணி, மகள் வெட்காளியம்மாள், நட்டார், மகன் செந்தில்குமார், இரு கைக்குழந்தைகள் ஆகிய 7 பேரும் மண் ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.