சென்னை: கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை நடப்பில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்ல தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா காலத்தில் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது என்பதால் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட அனுமதிக்குமாறும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கடந்த 40 ஆண்டு காலமாக இருக்கிறது. 1983 முதல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, குளங்களில் கரைப்பது வழக்கம்.
“கொரோனா பரவல் காரணமாக விநாயகர் ஊர்வலம் நடத்தப்படாது அதை நாங்களே கைவிடுகிறோம். ஆனால், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு அனுமதி தரவேண்டும்.
“சிறு கோவில்களைத் திறந்து மக்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியோடு விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி தர வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார் முருகன்.