சென்னை: தாம் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்றும் ஏராளமான அதிருப்தியாளர்கள் திமுகவிலிருந்து வெளியேற காத்திருக்கிறார்கள் என்றும் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் (படம்), டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்ததால் திமுகவின் முக்கியமான பதவி களிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் விளக்கம் திருப்தி கரமானதாக இல்லை என கூறிய திமுக தலைமை, கு.க.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது.
இதற்கிடையே ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது கு.க.செல்வம் பாஜக சென்னை அலுவலகம் சென்று வந்ததால் அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. முன்னதாக கு.க.செல்வம் அதிமுகவில் இருந்தவர் என்பதால் மீண்டும் அதிமுக செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்தக் கருத்துகளை மறுத்துள்ளார் கு.க.செல்வம். தான் எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும் கட்சி சாரா எம்எல்ஏவாக தனது பணியை தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று காலை பேசிய அவர், “திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை. இதுவரை நான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. தற்போது எந்த கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை,” என்றார்.
“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் தோற்றார். ஆனால் நான் வெற்றிபெற்றேன். மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பும் மக்கள் செல்வாக்கும் எனக்கு உள்ளது. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்.
“என் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கடிதத்திற்கு பதில் கடிதம்கூட திமுக தரவில்லை.
“எனது பிரச்சினைக்கு உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் காரணம். திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள். திமுகவில் கடும் அதிருப்தியிலுள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். கட்சியைவிட்டு அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்,” என செல்வம் கூறினார்.
கு.க.செல்வம்: நான் நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் காரணம்