சென்னை: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வழக்குப் போட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து, "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை செல்லும்," என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குறிப்பாக, தூத்துக்குடி வட்டாரத்தில் பெருமகிழ்ச்சி காணப்பட்டது. சமூகநல ஆர்வலர்கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

