விருதுநகர்: பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லாப் பள்ளிக்கூடங்களைப்போல விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பேருந்து வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியரும் ஓர் ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பரவல் அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளநிலையில் மாணவர்களுக்கு பாடங்களை தமிழக அரசு இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறது.
இந்தக் கிராமத்தில் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள் என்பதால் இணையம் மூலம் பாடம் கற்க அவர்களிடம் திறன்பேசி இல்லை. கைபேசி என்பது கனவாகவே இருந்து வந்த சூழ்நிலையில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கைபேசி வாங்கித் தர முடிவு செய்தார். இதன்படி மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளில் பள்ளியில் சேர்ந்த 4 மாணவர்களுக்கு கைபேசி வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கூறுகையில், "இப்பள்ளியில் எந்த வகுப்பிற்கு புதிதாக மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு கைபேசி இலவசமாக வழங்கப்படும். 2 கி.மீ. தூரத்தில் உள்ள அண்ணாநகரில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு எனது சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளேன்," என்றார்.

