சென்னை: தமிழ்நாட்டில் ஏழைகளுக்கான தனி வீடுகள் கட்டுமானத் திட்டத்தின்கீழ் 400,000 வீடுகளை 60 நாட்களில் கட்டி முடித்து ஒப்படைக்கும்படி குடிசை மாற்று வாரியத்துக்குத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
பிரதமர் வீட்டு திட்டத்தின்கீழ் கட்டப்படும் அந்த ஒவ்வொரு வீட்டுக்கும் மொத்தம் ரூ. 210,000 மானியம் வழங்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் நடக்கை யில், நான்கு கட்டங்களாக அந்தப் பணம் கொடுக்கப்படும். அந்த மானியத்தில் ரூ. 1.5 லட்சத்தை மத்திய அரசாங்கமும் ரூ. 60,000 தொகையை மாநில அரசாங்கமும் கொடுக்கின்றன.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் குடிசை மாற்று அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுடன் பேச்சு நடத்தினார். கூடுமான வரை விரைவாக அந்த வீடுகளைக் கட்டி முடித்து ஏழைகளிடம் ஒப்படைக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே குடிசை மாற்று வாரிய வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய பட்டா பத்திரங்களைக் கொடுக்கும்படியும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
உலக வங்கி உதவியுடன் கூடிய சென்னை நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஏழைகளுக்கான வீட்டுக் கட்டுமானத் திட்டம், மாநிலத்தில் குடிசைகளில் வாழும் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள 732 குடிசை பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்று இருக்கின்றனர் என்றாலும் 40 ஆண்டுகாலமாக அதற்கான பட்டாவை அந்தக் குடும்பங்கள் பெறவில்லை. காத்திருக்கும் 42,000க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பட்டாவை ஒப்படைக்கும்படி அதிகாரிகளை துணை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

