சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான திமுகவின் இமாலயத் தலைவராக இருந்த கருணாநிதியின் புதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி, அரசியலில் புதிய வியூகத்தை அரங்கேற்றப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.
'கலைஞர் திமுக' என்ற புதிய அரசியல் கட்சியை முக அழகிரி அறிவிக்கப்போகிறார் என்று தொண்டர்கள் ஊக்கத்துடன் பிரகடனப்படுத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரும் கட்சிகளும் தங்கள் நிர்வாக முறைகளை முழுமையாக மாற்றி அமைத்து வருகின்றன. தொண்டர்களை, பிரபலங்களைக் கட்சியில் சேர்க்கும் வியூகங்களையும் அவை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், இதுவரையில் தனித்தே இருந்து வரும் முக அழகிரியும் களமிறங்கப் போகிறார் என்று இப்போது பேச்சு அடிபடுகிறது. கருணாநிதி மறைந்ததும் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள எவ்வளவோ முயன்றும் அதில் அழகிரி வெற்றிபெறவில்லை.
அதேவேளையில், திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை வளைத்து இருக்கும் பாஜக, அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்த பல வழிகளிலும் யோசித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் 'அண்ணன் நம்மை அழைக்கப்போகிறார்' என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.
"கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சியை அழகிரி தொடங்கத்தான் போகிறார். திமுக தலைமை மீது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணங்களுக்காக சலசலப்பு இருக்கிறது," என்று அழகிரி ஆதரவாளர் தெரிவித்ததாக ஊடகத் தகவல் கூறியது.

