எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

2 mins read
590f1fbe-0a16-423c-b5d8-bad056105394
பாடகி மாளவிகா, எஸ்.பி.பாலசுப்ரமணியம். படம்: ஃபேஸ்புக் -

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்தார்.

இதே போல் வசந்தகுமார் எம்பிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த 5ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று கடுமையாகி நுரை யீரல் செயலிழக்கும் நிலைக்குச் சென்றதால் தொடர்ந்து 9 நாட் களாக செயற்கை சுவாசம் மற்றும் 'எக்மோ' கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அவர் நலம்பெற வேண்டும் என்று திரையுலகினர் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

இதற்கிடையே தம்மால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கிருமி தொற்றவில்லை என்று பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

மாளவிகா மூலம் எஸ்பிபிக்கு தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் பாடகி மாளவிகா நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "ஹேமசந்திரா, அனுதீப் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற எஸ்பிபியின் நிகழ்ச்சி ஜூலை 30ஆம் தேதி மற்றும் எஸ்பிபியுடன் நான், காருண்யா, சத்யா யாமினி உள்ளிட்ட பெண் பாடகர்கள் பங்கேற்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜூலை 31ஆம் தேதி படமாக்கப்பட்டன.

"ஒருவேளை அப்போதே எனக்கு கொரோனா பாதிப்பு இருந்திருந்தால் என்னுடன் அறையில் இருந்த மூன்று பெண் பாடகர்களும் தொகுப்பாளரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

"ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து என்னுடைய கணவர் வீட்டிலிருந்து பணி செய்து வருகிறார்.

"கடந்த 5 மாதங்களாக என்னுடைய வயதான பெற்றோர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

"கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டு வேலைக்குக் கூட வேலையாட்கள் வைக்கவில்லை. எனக்கு 2 வயது குழந்தை உள்ளது.

"அதன் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக நான் எந்த நிகழ்ச்சிக்காகவும் வெளியே செல்லவில்லை. இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத்தான் நான் முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.

"ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை அறிந்தேன். அதனையடுத்து நான் கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொண்டேன். அதற்கான சோதனை முடிவு ஆகஸ்ட் 8ஆம் தேதி வந்தது. எனக்கு, என்னுடைய பெற்றோருக்கு, என்னுடைய குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடைய கணவர் பாதிக்கப்படவில்லை.

"இதையடுத்து நாங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டோம். தயவுசெய்து தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.