சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகலில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று பேருந்துகள் கருகி சேதமடைந்தன.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால், பேருந்துகள் பல மாதங்களாக ஓடாமல் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இப்படி நிறுத்தப்பட்டு இருந்த சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் திடீரென்று தீ மூண்டது. ஐந்து பேருந்துகளில் தீப்பற்றியது. அவற்றில் மூன்று முற்றிலும் கருகி சேதமடைந்தன.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். யுனிவர்சல், இண்டர்சிட்டி, ஆகிய டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.