சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் அதிமுகவிற்கும் மத்தியில் ஆட்சி புரிகின்ற பாஜகவுக்கும் இடையில் விரிசல் கூடி வருவதாக கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழியான சசிகலாவின் செல்வாக்கு குறைந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று இது நாள் வரை அதிமுக ஆட்சி நடந்து வருவதற்கு மத்திய அரசுடன் அதிமுக அனுசரித்து நடந்து வருவதே முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
நடப்பது அதிமுக ஆட்சி என்றாலும் அதன் ஒவ்வொரு அசைவையும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறார்கள் என்றும் கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவில் இப்போது துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் முதல்வராக இருக்கும் பழனிசாமிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு பிறகு இருவரும் சமரசமாயினர்.
துணை முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ஏற்றுக்கொண்டார். அதேவேளையில், கட்சியில் பழனிசாமியைவிட பன்னீர் செல்வத்துக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டது. இத்தகைய ஓர் இணக்கம் ஏற்படவும் பாஜக உறுதுணையாக இருந்தது என்று தெரிகிறது.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பாஜக இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவே அதிமுக விரும்புவதாக கவனிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
இதை அப்போதைக்கு அப்போது வெளிப்படையாக இல்லை என்றாலும் மறைமுகமாக அதிமுக தலைவர்களில் சிலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தி மொழி போன்ற விவகாரங்களில் இது தெரியவந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதன் தொடர்பிலான பிரச்சினையும் இதில் இப்போது சேர்ந்துகொண்டுள்ளது.
கொவிட்-19 தொற்று இருப்பதால் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்துவிட்டது. இதை பாஜக மாநிலத் தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கடுமையாக விமர்சித்தார். கடந்த 30 ஆண்டு காலமாக ஒரு பெண்மணிக்கு அடங்கி இருந்த கோழைகளே இப்போது மாநிலத்தின் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று ராஜா வர்ணித்தார்.
இதற்குப் பதிலளித்த அதிமுக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அதே பெண்மணியிடம்தான் பாஜகவினர் இது நாள்வரை கைகட்டி நின்றனர் என்றார். “அதிமுக அரசும் கோழை அல்ல. அதன் தலைவர்களும் கோழை அல்ல. யாரும் உரசிப் பார்க்க வேண்டாம்,” என்று மறைமுகமாக பாஜக தலைவருக்கு அமைச்சர் பதிலடி கொடுத்தார்.
ராஜாவும் தமிழக பாஜக தலைவர் முருகனும், விநாயகர் சதுர்த்தியைப் பகிரங்கமாகக் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்காதது பற்றி கடுமையாகக் குறைகூறி வருகிறார்கள்.
எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு பார்க்கையில் சரியான வாய்ப்புக்காக அதிமுக தலைமைத்துவம் காத்து இருக்கிறது என்றும் அத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்ததும் பாஜகவை அது கைவிட்டுவிடும் என்றும் ஆருடங்கள் கூறுகின்றன.