சென்னை: சென்னையில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இ-பாஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தலைநகருக்குள் அதிகமக்கள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தொற்று விகிதம் 7 விழுக்காட்டிலிருந்து 10.7 விழுக்காடாகக் கூடிவிட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வு மன்றமும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தி இருக்கின்றன. கிருமித்தொற்று விகிதம் 10%ஐ தாண்டிவிட்டால் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அவர்களைப் பரிசோதிக்கும் நடைமுறைகளும் கூட்டப்பட்டுள்ளன.
தலைநகரில் நாள்தோறும் புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை 1,100 முதல் 1,200 வரை இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வார காலத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. சென்னையில் 12 மண்டலங்களில் தொற்று கூடி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பார்க்கையில், நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி, கொவிட்-19 தொற்று காரணமாக மொத்தம் 379,385 பேர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களில் 319,327 பேர் குணமடைந்துவிட்டனர். 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6,517 பேர் பலியாகிவிட்டனர்.
இவ்வேளையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓர் அறிவிப்பை விடுத்துள்ளார். கொவிட்-19 பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்வதற்கான வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
கோயம்புத்தூரில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர், அரசாங்கத்தின் இத்தகைய திட்டம் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

