கொரோனா கிருமித்தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறு தமிழகத்துக்கு வர விரும்புபவர்கள் நேரடியாக தமிழகத்துக்கு விமானம் மூலம் வருவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புவோருக்கு கிருமித்தொற்று பரிசோதனை, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்தன.
ஆனால் மத்திய சுகாதாரத் துறை அந்த நடைமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்தது.
விமானங்களில் பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதள் வைத்திருப்போருக்கு அரசின் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்பதே அது.
சென்னையில் தொடர்ந்து கிருமித்தொற்று அதிகரித்து வருவதாக் தமிழகத்தில் இந்த நடைமுறைகளில் தளர்வுகள் இல்லை. தமிழ்நாடு திரும்புவோர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக உள்ளது.
தனிமைப்படுத்தலைத் தவிர்க்க விரும்புவோர், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் தவிர வேறு மாநிலங்களுக்கு விமானம் மூலம் வந்து, பின் உள்நாட்டு விமானச் சேவை, சாலைவழி போக்குவரத்து போன்றவற்றால் தமிழகம் வரும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அபுதாபியில் இருந்து விஜயவாடா வழியாக சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் 110 இந்தியர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அனைத்து பயணிகளும் விஜயவாடாவிலேயே இறங்கிவிட்டனர். இதனால் விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் காலியாகவே சென்னை வந்தது என்று கூறப்படுகிறது.
அதேபோல் துபாய், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வந்த விமானங்களிலும் இத்தகைய போக்கே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.