இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ‘கோவிஷீல்டு’ என்ற கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அஸ்ட்ரா ஜெனகா என்ற மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை எந்தெந்த நாடுகளில் தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சண்டிகாரில் உள்ள பிஜிமெர் மருத்துவமனை, புனேயில் உள்ள ஏ.பி.ஜெ.மருத்துவ கல்லூரி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவ கல்லூரி உள்பட 17 இடங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நேற்று முதல் தொடங்கியது. நாடு முழுவதும் 1,600 பேரிடம் இந்த தடுப்பூசி சோதனை நடத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரு இடங்களிலும் சுமார் 300 பேரிடம் இந்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி திட்டத்துக்கு தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பான மருந்தாகக் கருதப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.