கோவை: துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் கோவை வந்த பயணிகளிடம் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தைக் கடத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 10ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகள் சோதனை செய்யப்பட்டனர்.
அப்போது, கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட கோவை மத்திய வருவாய் புலனாய்வின் துணை இயக்குநர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளில் சந்தேகத்திற்கிடமான கணவன், மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த 46 மற்றும் 33 வயதுடைய தம்பதியினர் தங்களது உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ஆறு பாக்கெட்டுகளில் இருந்த 2,610 கிராம் எடையுள்ள ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 812 மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் சுங்கத் துறையினரின் 'மெட்டல் டிடக்டர்', 'எக்ஸ்ரே' ஆகிய சோதனைகள் மூலம் கண்டறியப்படாத வகையில் தங்கத்தை உருக்கி தாளில் ஒட்டி அதனை உள்ளாடைகளில் தைத்து எடுத்து வரப்பட்டது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.
இவ்வாறு நூதன முறையில் கோவை விமான நிலையத்திற்குத் தங்கம் கடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், கூறினர்.
தங்கத்தைப் பிரித்து எடுக்க பல்வேறு கட்ட நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். தங்கத்தைக் கடத்திய தம்பதியினர் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் முடிந்ததும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

