திருச்சி: திருச்சி புறநகர் போலிசார் சல்மா, 30, என்னும் பங்ளாதேஷ் பெண்ணை நேற்று முன்தினம் கைது செய்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் பணத்துக்காக சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான தௌஃபிக் என்பவரின் மனைவி இவர் என தெரிய வந்தது.
தௌஃபிக்கை போலிசார் தேடியபோது சல்மா மனைவி என்பதும் பங்ளாதேஷில் இருந்து திருச்சி வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது. தௌஃபிக் பிடிபட்ட பின்னர் சல்மாவைத் தேடும் பணி தொடர்ந்தது.
இறுதியாக மணிகண்டம் என்ற பகுதியில் கந்தசாமி உடையார் தெருவில் ஒரு வீட்டில் இரு வயது ஆண் குழந்தையுடன் புதன்கிழமை இரவு போலிசிடம் சல்மா சிக்கினார்.
கடந்த ஐந்து மாதங்களாக இந்த வீட்டில் சல்மா தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அவர் இந்தியாவுக்குள் வந்ததற்கும் தங்கி இருப்பதற்கும் சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் அந்தப் பெண்ணிடம் இல்லை. சல்மாவும் அவரது குழந்தையும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவ்விருவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் நேற்றுக் காலை நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட சல்மா விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வெளிநாட்டினர் தொடர்புடைய சட்டப்பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர்.

