சென்னை: கன்னியாகுமரி மக்கள வைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா், 70, (படம்) வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின், வசந்தகுமாரின் சொந்த ஊரான கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிருமித்தொற்று பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வந்தவர், நிமோனியா காய்ச்சலால் காலமானார்.
அவரது மறைவுக்கு அதிபர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், "தொழில் முனைவராகவும் அரசியல்வாதியாகவும் நிரப்பமுடியாத வெற்றிடத்தை வசந்தகுமார் விட்டுச் சென்றுள்ளார். அவரது பொதுச்சேவையும் நலத்திட்ட உதவிகளும் பல பேரின் வாழ்க்கையை மாற்றியது. தமிழகத்திலிருந்து ஒலித்த மிக முக்கியமான குரல்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஏழை எளிய மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும் தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு," எனத் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதன்படி, கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட் டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வசந்தகுமாரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. வணிகம், சமூகசேவையில் அவர் பங்கு அளப்பறியது. தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதில் அவரது இலக்கு இருந்தது.
தம்பி மறைவால் அதிர்ந்த அண்ணன்
மருத்துவமனையில்
சென்னை: தனது தம்பி எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோ தரரும் கங்கிரஸ் மூத்த தலை வருமான குமரி அனந்தன் ஹைத ராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது... ஆளு நராக இருந்தாலும் அண்ணன் குமரி அனந்தனின் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்," என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் நடிகா் விஜய் வசந்த், வினோத்குமாா் என்ற இரு மகன்களும் தங்கமலா் என்ற மகளும் உள்ளனா். எளிய குடும் பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்தவா். தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருள்களை கொடுக்கும் 'வசந்த் அண்ட் கோ' நிறுவனத்தை 1978ல் தொடங்கினாா். 64 இடங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

