சென்னை: டெங்கி காய்ச்சல் போன்ற பிரச்சினைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவே உகந்த நேரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, மாநிலம் முழுவதும் மழைநீர் தேங்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வசதி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடிய முதல்வர் பழனிசாமி, பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால் நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தினார்.
பருவ கால சவால்களைத் திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள் மற்றும் கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
"மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விரைவில் பருவ மழையும் தொடங்க இருப்பதால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.
இல்லையெனில் டெங்கி கொசுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.
டெங்கி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவே உகந்த நேரம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தென்தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அந்த மையம் கூறியுள்ளது.

