திருப்பூர்: விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்க தாராபுரம் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது காதக்கோட்டைக் கிராமம். இங்கு தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனம் திடீரென அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்கத் தொடங்கி உள்ளது. எந்தவித முன்அறிவிப்புமின்றி தங்கள் அனுமதியையும் பெறாமல் அந்நிறுவனம் அத்துமீறுவதாக விவசாயிகள் சாடியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அத்தனியார் நிறுவனத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ள விவசாயிகள், ஏற்கெனவே அமைக்கப்பட்ட உயர் அழுத்த கோபுரங்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே வெள்ளக்கோவில் பகுதியிலும் விவாய நிலங்க ளில் இத்தகைய உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் அப்பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்றும் இனிமேலும் தாமதப்படுத்தினால் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

