தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தில் முதன்முதலாக அவசர சிகிச்சை வாகன ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் டிவிகே நகரைச் சேர்ந்த சுப்பிரமணி-சாவித்திரி தம்பதிகளின் மகள் வீரலட்சுமி, 30. இவர், டாக்சி ஓட்டுநரான தனது கணவர் முத்துகுமாருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அவசர சிகிச்சை வாகனம் ஓட்டும் பணி நியமனம் குறித்து வீரலட்சுமி கூறுகையில், “மக்கள் சேவையே மகத்தான சேவை என்பதால் இந்தப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளேன். ஓட்டுநர் பணி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இப்பணியில் சேர்ந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தப் பணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது, நான்தான் தமிழகத்தின் முதல் பெண் அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் என்பது.
“இந்த 108 வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. இதெல்லாம் எனக்கு தண்ணீர் பட்டபாடு. என்னைப்போல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளிலும் சேரவேண்டும்,” என்றார்.