சென்னை: அனைத்துப் பாடங்களிலும் முழுமையாகத் தேர்ச்சி பெறாத மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்த விவகாரம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சூட்டைக் கிளப்பிவிட்டு வருகிறது.
"மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது," என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகஅரசு தனது 'அரியர்' மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பை மீட்டுக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து, மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 26ஆம்தேதி அறிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அனில் சஹஸ்ரபுதே, "அரியர்' தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது," என்று தெரிவித்துள்ளார்.
"இந்த தேர்ச்சி குறித்தான வழக்கு விசாரணையின்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்,'' என்றும் அனில் சஹஸ்ரபுதே மேலும் கூறியுள்ளார்.
'அரியர்' தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்காமல் தேர்ச்சிக்கு வழி காணவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, "25% மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்தவர்களையும் 25 பாடங்களுக்கும் மேலாக 'அரியர்' வைத்துள்ள மாணவர்களையும் ஒரேநேரத்தில் தேர்ச்சி பெறவைப்பது என்பது ஏற்புடையதல்ல,'' என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

