மதுரை: மதுரையில் யாசகர் ஒருவர் 12வது முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 10,000 (S$186) நன்கொடை வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி ஆலங்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன், வயது 65, திருமணமான சில ஆண்டுகளில் வேலை தேடி மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால் யாசகம் எடுக்கத் தொடங்கினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொந்த ஊர் திரும்பியபோது அவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருந்ததால் மதுரை, சுற்றியுள்ள மாவட்டங்களில் தங்கி அவர் யாசகம் எடுத்து வந்தார்.
இதில் உணவு செலவு போக எஞ்சிய தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை வரையில் ரூ.10 ஆயிரம் வீதம் 11 முறை அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் 12வது முறையாக ரூ.10 ஆயிரத்தை ஆட்சியர் வினய்யிடம் அவர் வழங்கினார்.
இது குறித்து பேசிய பூல்பாண்டியன், "கொரோனாவால் யாரும் பாதிப் படையக்கூடாது என்பதற்காக யாசகத்தில் கிடைத்த தொகையை நன்கொடையாக வழங்கினேன்," என்றார்.
தமிழகத்தில் தற்போது பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வதாகக் கூறிய அவர், தனது சேவை தொடரும் என்கிறார்.

