தூத்துக்குடி: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட சிலர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவர்கள்தான் ‘ரஜினி முதல்வர் வேட்பாளர்’ என சுவரொட்டி ஒட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது அனுமதியின்றி ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தன.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மக்கள் மன்றத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தவே அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், “மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது,” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதனால் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். நடிகர் ரஜினி மட்டுமல்ல, வேறு யார் புதிய கட்சியை ஆரம்பித்தாலும் அதனால் அதிமுகவிற்கு பாதிப்பு வரப்போவது கிடையாது.
இதனால் திமுகவிற்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு என்ற இடத்தில் நலத்திட்ட உதவி களை வழங்கியவர், 30 திருநங்கைகளுக்கு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய வீடுகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.