சென்னை: பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எப்போதுதான் திறக்கப்படும் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையம் வழி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகளைத் திறக்காமல் பாடங்களையும் நடத்தாமல் உள்ளதால், பாடத்திட்ட சுமையைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30% பாடத்திட்டத்தைக் குறைக்கவும் இதர வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத்திட்டத்தைக் குறைக்கவும் கல்வி நிபுணர்கள் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தைக் குறைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.