கொரோனா கிருமிப் பரவலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான காலகட்டத்திலும், மாணவர்களிடம் முழு கல்விக்கட்டணத்தை வசூலித்துள்ள 14 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளான நேற்று, ஈரோட்டில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அமைச்சர் செங்கோட்டையன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “பெற்றோர்- மாணவர்களின் மனநிலை, கொரோ னாவின் தீவிரத்தைப் பொறுத்தே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
“இணையம் மூலமாக சில மணி நேரங்கள் மட்டுமே பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் நிலையில், பல பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்தம் செய்து வருகின்றன.
“மக்களின் நலனுக்காக பல சலுகைகளை அறிவித்து வரும் தமிழக அரசு, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை முழுமையாக வசூலிக்கத் தடை விதித்துள்ளது.
“இந்த தடையையும் மீறி அதிக கட்டணத்தை வசூலித்துள்ள 14 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என்று செங்கோட்டையன் கூறினார்.
இதற்கிடையே, ‘அரியர்’ தேர்வுகளை ரத்து செய்ததன் தொடர்பில், “தமிழக அரசின் முடிவு தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், திமுக எம்எல்ஏ பொன்முடி, “அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்,” என்றார்.
அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்புதான் ‘அரியர்’ தேர்ச்சி. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உயர்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. மாண வர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனவே மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை,” என்று விளக்கம் அளித்துள்ளார்.