தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மூன்று நகரங்களில் இருந்தும் அனைத்துலக விமானச் சேவை விரைவில் துவக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
மாநிலத்தில் கொரோனா கிருமிப் பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதல்வர் பழனிசாமியைப் பாராட்ட வேண்டும் என்று ஹர்தீப் சிங் கூறினார்.
இதுகுறித்து தமிழக ஊடகங்களிடம் பேசிய அவர், “மத்திய அரசின் வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கடந்த 9 முதல் 15ஆம் தேதி வரை சென்னை விமான நிலையத்துக்கு 33 அனைத்துலக விமானங்கள் வந்து, திரும்பியுள்ளன," என்றார்.
மேலும், “அபுதாபி, பஹ்ரைன், தோகா, துபாய், கோலாலம்பூர், குவைத், லண்டன், மஸ்கட், ரியாத், இலங்கை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
“இன்னும் அதிக அளவில் விமானங்களை இயக்கவும் தமிழக முதல்வருடனும் இதர அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்.
“தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் விரைவில் அனைத்துலக விமானச் சேவைகள் துவக்கப்படும்,” என்று கூறினார்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளிலும் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 80,000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்துடன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா, பாரிஸ், துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் புறப்பட்டுச் சென்றனர்.
அதேபோல் அமெரிக்கா, குவைத், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து 10 சிறப்பு விமானங்களில் 913 பேர் சென்னை திரும்பினர். இவர்கள் குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துக்கொண்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர்.