மதுரை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், வீடு திரும்பாமல் உயிரை விட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து, குற்றம்சாட்டப் பட்ட நான்கு காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வாழைத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் இதயக்கனி. இவர், அதே ஊரில் தான் காதலித்து வந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இதயக்கனியின் சகோதரர் ரமேஷை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், ரமேஷ் மறுநாள் காலை வரை வீடு திரும்பாததால், காவல்நிலையம் சென்று கேட்டபோது, அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரமேஷ் அவரது வீட்டுக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் இறந்துகிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ரமேஷின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அவரது உயிரிழப்புக்கு போலிசாரே காரணம் எனவும் குற்றம்சாட்டினர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
போலிசாரின் விசாரணை தொடர்கிறது.