சாயல்குடி: விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் இணைய விளையாட்டு மோகம், அவனது தாயின் வங்கிக் கணக்கை துடைத்துவிட்டது.
தனது கணக்கில் இருந்து மாயமான ரூ.90,000 பணத்தை மீட்கமுடியாது என விசாரித்து தெரிந்துகொண்ட பெற்றோர், மகனுக்கு விநோதமான தண்டனையையும் அளித்துள்ளனர். ஒரு நோட்டில் 1 முதல் 90,000 வரை எண்களிலும் எழுத்திலும் எழுதும்படி நூதனத் தண்டனையையும் பெற்றோர் வழங்கினர். இருப்பினும், 3,000 வரை மட்டுமே எழுதிய சிறுவன் கை வலிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, “இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது,” என பெற்றோர் அறிவுரை கூறி மன்னித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் குமார், 12, (உண்மைப் பெயரல்ல) 8ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக விடுமுறையில் இருந்த குமார் எந்நேரமும் கைபேசியில் மூழ்கிக் கிடந்துள்ளார். தனது தாயின் கைபேசியில் ‘ஃப்ரீ ஃபையர் கேம்’ எனும் விளையாட்டை இணையம் வழி விளையாடியவர், ‘கேம் அப்டேட்’ கேட்கும் நேரத்தில் எல்லாம் வங்கியில் இருந்து வந்த ஓடிபி எண்களைப் பயன்படுத்தி விளையாடி உள்ளார். இவ்வாறு குமார் தொடர்ந்து செய்ததை அடுத்து, அவரது தாயின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.90,000 பணம் காலியானது.
இதற்கிடையே, தங்களது மகன் இணைய வகுப்பில் தான் கவனம் செலுத்துகிறார் என நினைத்திருந்த பெற்றோர், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது, இந்த உண்மையை அறிந்து அதிர்ந்தனர். வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது இணைய விளையாட்டிற்கு கட்டணமாகச் சென்றது தெரியவந்தது. மகனும் தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.