சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 24% அதிக மழை பெய்திருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 3 மீட்டர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சராசரியாக 402 மி.மீ. மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 323 மி.மீ. மழை கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 24% அதிகமாக மழை பெய்துள்ளது.
இதே காலகட்டத்தில் வழக்கமாக 370 மி.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட 9.5 % அதிகமாக மழை பெய்துள்ளதாக வாரியத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்தி தெரிவித்துள்ளது.
ஓராண்டில் வழக்கமாக தமிழகம் பெறும் 985 மி.மீ. மழையில் 41% தென்மேற்குப் பருவமழைக் காலத்திலேயே கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அதிக மழை கிடைத்திருப்பதால், சுமார் 3 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 14 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
இப்போது மாநிலம் முழுவதும் 17 அணைகள் மூலமாக 556 குடிநீர்த் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லா அணை களையும் சேர்த்து இப்போது 127 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்திருப்பதால், இந்த ஆதாரங்களைக் கொண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வரை மாநில நீர்த் தேவையைச் சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.