கோவை: தமிழகத்தில் வரதட்சணை கேட்ட மாமியார் குடும்பத்தை அவமானப்படுத்த மருமகள் குடும்பத்தினர் சுவரொட்டி ஒட்டிய சம்பவம் புதிய பாணி போராட்டமாகத் தலை எடுத்துள்ளது.
கோவையில் ‘ஜெம்ஸ்’ என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வரும் ஸ்ரீகாந்த்-கல்பனா தம்பதியர், தங்கள் புதல்வரான ரித்தீஷ் என்பவருக்குச் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணி என்ற பெண்ணை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி மணம் முடித்தனர்.
திருமணத்தின் போது 2 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள், வைர நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன. மருமகள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மேலும் ரூ. 1 கோடி வரதட்சணை கேட்டு பெண்ணைக் கட்டாயப்படுத்தி வந்த மாமியார் அவரை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கணவருடன் சேர்ந்து வாழவைக்கக் கோரி அன்னப்பூரணி பல வழக்குகளைத் தொடுத்தும் உருப்படியான பலன் இல்லை.
கடைசியில் மாமியார் குடும்பத்தின் லட்சணம் பற்றி ஊராருக்குத் தெரியவேண்டும் என்பதற்காக கோவையில் ராசிக்கல் ஜோதிட நிலையம் செயல்படும் பகுதியில் பெண்ணின் உறவினர்கள் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டனர்.
வரதட்சணைக்கு எதிரான போராட்டத்தில் சுவரொட்டி புதிய பாணியாக உருவெடுக்கும் போல் தெரிகிறது.