சென்னை: தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் 50,000 பேருக்கு இணையம் வழி இலவசக் கல்வியும் அதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.
தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் அமெரிக்காவின் ‘கோா்ஸெரா’ நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம், வேலையற்ற இளையர்கள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் வேலை வாய்ப்பின்றி பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிந்துவிட்டு வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரும் ஏராளம்.
அத்துடன், கொரோனா ஊரடங்கினாலும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வேலையற்ற 50,000 பேருக்கு இணையம் வழியில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ‘கோா்ஸெரா’ நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் உள்ள மக்களின் திறன்களை வளா்க்கும் நோக்கில், பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு பாடங்களில் சான்றிதழ்களையும் பட்டப் படிப்புகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த இணையப் பயிற்சியின் மூலம் 50,000 பணியிடங்கள் நிரப்பப்படுமானால் வேலையற்றோரின் விகிதம் குறைந்து பொருளாதாரம் மேம்படும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.