தமிழகத்தின் பொருளாதாரம் இரண்டு மாதங்களில் ேமம்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க திரு ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது.
இந்தக் குழு கடந்த மே மாதத்திலிருந்து பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டது. இதையடுத்து திங்கட்கிழமை அன்று தனது ஆய்வறிக்கையை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் குழு வழங்கியது.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவரும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரங்கராஜன், பொருளாதார நிலையை பெருக்க பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
"கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளது. பொது முடக்கத்தில் இருந்து விடுபட்டால்தான் மாநிலத்தின் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும்.
"நாங்கள் கணித்துள்ளபடி, 2020-21-ஆம் நிதியாண்டில் வளா்ச்சி 1.71 விழுக்காடாக இருக்கும். ஆனால், அதில் சரிவு சிறிது இருக்கலாம் எனத் தெரிகிறது. எந்தளவுக்கு இருக்கும் என்பதை சரியாக கணித்துச் சொல்வது கடினம். சரக்கு மற்றும் சேவைகள் வருவாய், பெட்ரோலுக்கான வரி, மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றைப் பாா்த்தால் நோய்த்தொற்றுக்கு முன்பு இருந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் பழைய நிலைக்கு வரலாம் எனத் தோன்றுகிறது," என்று அவர் கூறினார்.
"நோய்த்தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட செலவினங்களால் நிகழாண்டில் கடன் சுமை உயரத்தான் செய்யும். சுகாதாரச் செலவுகளை எதிர்கொள்ள ரூ.5,000 கோடிக்கு மேல் செலவிட வேண்டியிருக்கும் என்று திரு ரங்கராஜன் தெரிவித்தார். இந்த நிலையில் குழுவின் பரிந்துரைகளை கவனமாகப் பரிசீலித்து தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சொந்தப் பணிகளை ஒதுக்கி வைத்து அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் நிபுணர் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் செயல்பட்டதாகக் கூறிய முதல்வர், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

