வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புறப்படும் நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். அந்தச் சான்று 96 மணி நேரம் மட்டுமே செல்லு படியாகும்.
அதற்குள்ளாக அவர்கள் வரக்கூடிய இடத்துக்கு வந்ததாக வேண்டும். குறித்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறை உள்ளது. இதன் காரணமாக பன்னாட்டு முனையத்தில் மேலும் ஒரு கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படுகிறது.
இதனை தனியார் மருத்துவமனை செயல்படுத்தவிருக்கிறது.
இதற்கிடையே சென்னை உள்நாட்டு முனையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை திடீரென ஒரே நாளில் சுமார் 5,000 பயணிகள் குறைந்தது வழக்கமானதே என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன. நேற்று முன்தினம் 128 விமானங்கள் இயக்கப்பட்டு 13,000 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் நேற்று 121 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு சுமார் 8,000 பேர் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது, இதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 பயணிகள் குறைவு.
பயணிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமானது என்று அதிகாரிகள் கூறினாலும் இ-பாஸ் குளறுபடிகளால் பயணிகள் குறைந்திருக்கலாம் என்று பயணிகள் சிலர் கூறுகின்றனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் முகப்புகள் கடந்த வெள்ளிக் கிழமை திடீரென மூடப்பட்டன. இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து ஞாயிறு மாலையிலிருந்து மீண்டும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இ-பாஸ் முகப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளன.