சேலம்: தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் குப்பை அள்ளும் தொழிலைச் செய்து வரும் நல்ல தம்பி என்பவர், தனது நிலத்தில் தனது சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தி தனது முழு உருவச் சிலையை வடித்துள்ளார்.
பலரும் வந்து பார்த்துச் செல்லும் இந்தச் சிலையை மிகவும் பிரம் மாண்டமான முறையில் திறப்பதற்கு நல்லதம்பி திட்டமிட்டுள்ளார். அண்மையில் நிலம் ஒன்றை வாங்கியவர், அதில் தனது சொந்த சிலையை உருவாக்க ரூ. 10 லட்சத்தை செலவழித்துள்ளார்.
சேலம் மாவட்டம், அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.நல்லதம்பி, தெருவில் வீசப்படும் பாட்டில்களை எடுத்து, அவற்றை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
“நான் சிறுவயது முதலே எனக்கென ஒரு சிலை வைக்க விரும்பினேன். இப்போது என் கனவு நனவாகியுள்ளது,” என்றார்.
இதற்கு முன்னர் கொத்தனார் பணியில் ஈடுபட்டு வந்த நல்லதம்பியால், அந்த வேலையைத் தொடரமுடியாமல் குப்பை அள்ளும் தொழிலில் இறங்கினார். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், மறுசுழற்சி செய்யும் பொருட்களைச் சேகரித்து ரூ.200 முதல் ரூ.300 வரை சம்பாதிக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்ட நல்லதம்பி, தனது செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் தனக்குத் தானே சிலை அமைத்துள்ளார்.