சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நிதியை உடனடியாக வழங்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள தமிழகம் உட்பட ஏழு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி வழி கலந்துரையாடினார்.
அப்போது, ஊரடங்கின் காரணமாக முடங்கிய பொருளாதாரத்தை மீட்க தளர்வுகளை அதிகப்படுத்தும்படி மாநில முதல்வர்களை மோடி வலியுறுத்தினார்.
ெதாடர்ந்து பேசியவர், “கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் பங்கு பாராட்டிற்குரியது. இதன் மூலம், நாட்டிலுள்ள பிற மாநிலங் களுக்கு தமிழ்நாடு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது,” என்று கூறினார்.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இந்த ஆலோசனையில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
அதன்படி, கொரோனா தடுப்புப் பணிக்காக மேலும் ரூ.3,000 கோடி உடனடியாகத் தேவை என்று கூறியவர், “ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி ஒதுக்கவேண்டும்.
“கொரோனா முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகம் செலவிடப்படுகிறது. நிதி நெருக்கடியான காலகட்டத்தில் தொடர்ந்து இவ்வளவு தொகையைத் தமிழக அரசால் செலவிட முடியாது என்பதால் கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகத்திற்கு மேலும் ரூ.3,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
“அத்துடன், ரூ. 1,000 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாக விடுவிக்கவேண்டும்,” என்று முதல்வர் கோரினார்.
தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா இறப்பு விகிதம் 1.62% ஆக உள்ளது எனக் குறிப்பிட்டவர், கொரோனா பரிசோதனைக்கு தினமும் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், இதில் சரிபாதியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 63% மக்கள் மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோனை தொடங்கி உள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்கான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.3,000 கோடி நிதியை மத்திய அரசு அளிக்கவேண்டும். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாகத் தரவேண்டும்.
தமிழக முதல்வர் பழனிசாமி