பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்தமாதம் 5ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
பின்னர் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். சந்திப்புக்கு பின், "எஸ்பிபி நலமாக இருக்கிறார் எனக் கூறமுடியாது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என தெரிவித்தார்.