தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான உத்தரவை அதிபர் விரைவில் பிறப்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 பே அவர்கள்.
அவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திரு கே. முரளி சங்கர், அவரது மனைவி எஸ்.டி. தமிழ்செல்வி ஆகியோர்தான் அவர்கள்.
1968ஆம் ஆண்டில் பிறந்த இவரர்கள் 1995ஆம் ஆண்டில் மாஜிஸ்திரேட் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இருவரும் மாவட்ட முதன்மை நீதிபதிகளாக இருக்கின்றனர்.
திரு முரளி சங்கர் கோவை அரசு சட்டக் கல்லூரியிலும் திருமதி தமிழ்செல்வி புதுச்சேரி சட்டக் கல்லூரியிலும் பயின்றவர்கள்.
மாஜிஸ்திரேட்டாகத் தேர்வு பெற்று பயிற்சி பெற்ற போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
திரு முரளி திருச்சி மாவட்டத்திலும் அவரது மனைவி மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் முதன்மை நீதிபதிகளாக இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.